×

சென்னை அண்ணாசாலையில் திடீர் பரபரப்பு நடுரோட்டில் அழகுகலை நிபுணரை கட்டிப்பிடித்து சரமாரி முத்தம்: மென்பொறியாளர் அதிரடி கைது; பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

சென்னை: அண்ணா சாலையில் நடந்து சென்ற இளம் அழகுகலை நிபுணரை வழிமறித்து கட்டியணைத்து ‘இச்இச்’ முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த, மென்பொறியாளர் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது. சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (26), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அழகுகலை நிபுணரான இவர், தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் இருந்து இந்துமதி, மெட்ரோ ரயில் மூலம் அண்ணா சாலையில் உள்ள டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து அவர் வேலை செய்யும் அழகு நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

தேனாம்பேட்டை தனியார் வங்கி அருகே செல்லும் போது, எதிரே பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென இந்துமதியை பார்த்ததும் தனது பைக்கை நிறுத்திவிட்டு, சாலையில் யாரேனும் வருகிறார்களான என்று பார்த்துள்ளார். அப்போது மழை பெய்ததால் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. உடனே அந்த வாலிபர், இந்துமதியின் அருகில் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை கட்டியணைத்து உதட்டில் சரமாரியாக முத்தம் கொடுத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத இந்துமதி உதவி கேட்டு அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த அந்த வாலிபர், தனது பைக்கை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டார்.

பின்னர் சம்பவம் குறித்து இந்துமதி தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, வாலிபர் தப்பி சென்ற பைக் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, குரோம்பேட்டையை சேர்ந்த உதய சரவணன் (31) என்றும், மென்பொறியாளரான இவர், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் உதய சரவணன் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். சென்னை அண்ணா சாலையில் நடுரோட்டில் நடந்து சென்ற இளம்பெண் ஒருவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சென்னை அண்ணாசாலையில் திடீர் பரபரப்பு நடுரோட்டில் அழகுகலை நிபுணரை கட்டிப்பிடித்து சரமாரி முத்தம்: மென்பொறியாளர் அதிரடி கைது; பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annasalai ,Anna Road ,Anna Road, Chennai ,
× RELATED நீதிபதி குடியிருப்புக்குள் செல்ல...